சித்தர்கள் வாழ்வும் அவர்களின் செயல்பாடுகளும் அமானுஷ்யம் நிறைந்தவையாக இருக்கும். இன்றும் பொதிகை, பழநிமலை போன்ற இடங்களில் அவர்கள் அரூபமாக உலா வருவதாக தகவல்கள் உண்டு. அப்படிப்பட்ட சித்தர்களில் போகர் தனித்துவமாகக் கருதப்படுகிறார். ஏனெனில் பழநி முருகனின் சிலையை நவபாஷாணங்களால் உருவாக்கியவர் அவர் என்பதால். நவபாஷாண முருகன் சிலையை உருவாக்க போகர் என்னென்ன பாஷாணங்களைப் பயன்படுத்தினார், அதன் உறுதித் தன்மைக்கு என்னவிதமான கலவைகளைக் கலந்தார், அதற்காக போகரின் சீடர்கள் எங்கெல்லாம் சென்று மூலிகைகளைச் சேகரம் செய்து வந்தனர் என அத்தனை விவரங்களையும் இந்த இறையுதிர் காட்டில், அன்று எனும் பகுதியில் அழகு தமிழ்நடையில் தந்துள்ளார் நூலாசிரியர். அத்துடன் அன்று போகர் செய்த ஒரு நவபாஷாண லிங்கத்தையும் இன்று நடக்கும் சம்பவங்களையும் தொடர்புப்படுத்தி, அன்று இன்று என்ற இரு நிகழ்வுகளையும்; விறுவிறுப்போடும் திடீர் திருப்பங்களோடும் படிக்கப் படிக்க பரபரப்புத் தொற்றிக்கொள்ளும் எழுத்து நடையில் இணைத்திருக்கிறார் இந்திரா செளந்தர்ராஜன. ஆனந்த விகடனில் தொடர்ந்து 87 வாரங்கள் வெளிவந்து வாசர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இறையுதிர் காடு, இரண்டு அழகிய நூல்களாக உருப்பெற்றுள்ளது. போகர் செய்த நவபாஷாண முருகன் சிலை வரலாற்றை அறிய இறையுதிர் காட்டில் இனி உலவுங்கள்!