இடைவிடாது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு யுத்தம், அதில் ஈடுபட்டிருக்கும்
தன் பிள்ளை, எதுவோ விரும்பத்தகாதது நிகழப் போகிறது என்ற கிலேசம், தன்னை
வந்து அடையப்போகும் கெட்டச் செய்தியைத் தவிர்க்க வீட்டிலிருந்து வெளியேறி
வயல்கள் ஓடைகள் ஆறுகள் மலைகள் என நெடிய நடை பயணத்தை மேற்கொள்கிறாள் தாய்.
ஒரு குடும்பத்தையும் அதனோடு பின்னப்பட்ட உறவுகளையும் ஒரு யுத்தம் எப்படி
உள்ளும் புறமுமாகப் பாதித்து கடும் சிக்கலுக்கு ஆளாக்கவியலும் என்பதை
அதிகமும் தனக்கும் தனது பிள்ளைக்குமான ஒரு தாயின் நினைவுகளின் பின்னணியில்
வைத்து விவரிக்கும் இந்நாவல் நம் காலத்தின் மிகச் சிறந்த யுத்த எதிர்ப்பு
நாவல். ஒரு இஸ்ரேலியப் படைவீரனது தாயின் பார்வையிலிருந்து
எழுதப்படிருக்கும் இந்நாவலில் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய யுத்தத்தைப் பக்கச்
சார்பின்றி அணுகியிருக்கும் நூலாசிரியர் இஸ்ரேலிய அரசாங்கத்தையும்
தொடர்ந்து தீவிரமாக விமர்சித்து வருபவர். இஸ்ரேலியப் படைவீரனான தனது மகனை
யுத்தத்தில் பறிகொடுத்தவர். ஒருவிதத்தில் நாவலில் வரும் தாயான ஓரா டேவிட்
கிராஸ்மன்தான். எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் படையிலிருக்கும்
தனது மகனை இந்நாவல் காப்பாற்றும் என அவர் நம்பினார். நிதானமும் அழகும்
கூடிய ஒரு மொழியில் எழுதப்பட்டிருக்கும் படைப்பு இது. டேவிட் கிராஸ்மன்
(1954) ஜெரூசலேத்தில் பிறந்தவர். புனைவு, அபுனைவு, குழந்தைகள் இலக்கியம் என
எண்ணிறைந்த படைப்புகளுக்குச் சொந்தக்காரர். இவரது படைப்புகள் ‘தி
நியூயார்க்கர்’ இதழில் வெளிவந்திருக்கின்றன, உலகெங்கும் முப்பது மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஃப்ரான்சின் செவாலியே, ஜெர்மனியின் புக்ஸ்தெஹுட
புல்லே, ரோமின் ப்ரிமியோ பெர் லா பீஸ் எல்’அஸியோன் உமிடாரியா,
ப்ரீமியோ இஷ்கியா - இதழியலுக்கான சர்வதேச விருது, இஸ்ரேலின் எமெட் பரிசு,
குந்தர் க்ராஸ் அறக்கட்டளையின் அல்பட்ராஸ் போன்ற விருதுகளுடன் 2017ஆம்
ஆண்டுக்கான சர்வதேச மேன் புக்கர் பரிசும் பெற்றவர்.