தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி.
ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’. ‘கிராம ஊழியன்’ இதழில் 1944ஆம் ஆண்டு
தொடராக வெளிவந்து 1948ஆம் ஆண்டு நூல் வடிவம் பெற்றது. தி.ஜா.வின் முதல்
நாவல் என்ற தகுதியை மீறி அவரது பிந்திய நாவல்களில் வெளிப்படும் கலை
நுட்பங்களின் ஆரம்பச் சாயல்களைக் கொண்டது என்ற பெருமையும் இந்த நாவலுக்கு
உண்டு. ஆண் - பெண் உறவில் சக மதிப்பு, பரஸ்பர விழைவு, பெண்ணுக்கும்
பெண்ணுக்கும் இடையிலான தோழமை என்ற உறவுநிலைச் சித்திரிப்புகளுடன் தஞ்சை
வட்டார மொழி, கிராமியப் பின்னணி, இயற்கையின் மானுடத் தோற்றம் என்று பிற்கால
நாவல்களில் வெளிப்பட்ட இயல்புகளின் மூல உதாரணங்களை ‘அமிர்த’த்தில்
காணலாம். கூறு மொழியால் பழையதாகத் தென்பட்டாலும் பேசு பொருளால் என்றும்
புதிதாகத் தொனிக்கும் நாவல் இது.