நேற்று அவளது மானத்தை அவன் காத்ததைக் கேட்டு, இது நாள் வரை அவளது மானத்தைக்
களவாடி விட்டானே என்று அவனிடத்தில் கொண்டு இருந்த கோபம், சூரியனைக் கண்ட
பனித்துளியாய் மறைந்து போனதை உணர்ந்தே இருந்தாள். அவன் மீதான கோபத்தை அவனே
போக்கி விட்டான்.
எல்லா விதத்திலும் யோசித்துப் பார்த்தாலும் அவனது காதல் அவளுக்குக்
கொஞ்சம் கொஞ்சமாக புரிவதாய்... நேற்று இரவு அவன் விழியில் கண்ட காதலில்
அவளது மனம் கரைந்தே போயிற்று. அது பொய்யில்லையே...! எது எப்படியோ, அவனுடன்
வாழ்ந்து தான் பார்க்கலாமே என்று அவளது காதல் கொண்ட மனம் நினைத்தது
விரும்பியது.
எப்போதும் நிழலிடம் தஞ்சம் அடைபவளுக்கு இன்று அதன் தாக்கம் கொஞ்சம் கூட
இல்லை.நிழல்தான் நிஜமாய் உருமாறி அவள் அருகில உறங்கிக் கொண்டு இருக்கிறதே.
மனதில் எழுந்த காதல் மீண்டும் அவனை முகத்தைப் பார்க்க விடாமல் அவளை நாணச்
செய்ய எழுந்து தனது அறைக்குச் சென்றாள்...