பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்து திரிவதை என்னால் காண முடிகிறது. உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு ஆணை கூறுகிறது.
ஆனால் நடைமுறையில் பொதுமக்கள் உரிய காலத்தில் பட்டா பெறுவது குதிரை கொம்பாக உள்ளது. வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா பெற பொதுமக்கள் தவம் இருக்கிறார்கள். ஆண்டு கணக்கில் பட்டா பெறுவதற்காக பொதுமக்கள் நடையாய் நடந்து ஓய்ந்து போவதை பார்க்கும்பொழுது இந்த ஜனநாயக நாட்டில் “நாம் எங்கே வாழ்கிறோம்" என்கிற கேள்வி மனதில் எழுகிறது.
தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு இதுவரை பொது மக்களிடமிருந்து வந்த மனுக்களில் பெரும்பாலானவை பட்டா மாற்றம் சம்மந்தப்பட்டவை. இதிலிருந்தே பட்டா மாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது. பட்டா பெற பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பமே நான் இந்த நூலை எழுத என்னைத் தூண்டியது.
பட்டா மாற்றத்தை பொதுமக்கள் அலைந்து திரியாமல் எளிதில் பெற அது தொடர்பான சட்டங்களையும், விதிமுறைகளையும், வழிமுறைகளையும் அறிந்து கொள்வது அவசியமாகிறது. மேலும்
தெரிந்து கொண்ட சட்டங்களையும், விதிமுறைகளையும் முறையாக பயன்படுத்தினால் வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா பெறுவது எளிது.பட்டா தொடர்பான சட்டங்களையும், விதிமுறைகளையும் பயன்படுத்தி பொதுமக்கள் எப்படி எளிதாக, அதிக செலவில்லாமல் பட்டா பெறுவது என்பது பற்றியும் தவறான பட்டா மாற்றத்தை இரத்து செய்வது பற்றியும் இந்நூலில் விரிவாக சொல்லியுள்ளேன்.
இந்நூல் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
நன்றி!வணக்கம்.