நம்மில் பல பேர் அவர்களின் சம்பளத்தில் சுமார் 30 சதவிகிதத்துக்கு மேல் சேமிக்கிறார்கள். ஆனால், அதனை லாபகரமாக முதலீடு செய்து அதனைப் பெருக்குகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், பெரும்பாலோருக்கு எந்த முதலீட்டை எப்படி ஆரம்பிக்க வேண்டும், அதற்கு என்ன ஆவணங்களைக் கொடுக்க வேண்டும் எனத் தெரியாமல் இருக்கிறார்கள். இன்னும் பலர் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை முதலீடாக நினைத்து ஆண்டாண்டு காலமாக பிரீமியம் கட்டி வருகிறார்கள். ஆனால், பலனோ 5 சதவிகித வருமானம்கூட இல்லை. இதுபோன்ற விளக்கங்களைச் சொல்லி, பணத்தை எப்படி சரியாக நிர்வகிப்பது என இந்த நூல் வழிகாட்டுகிறது. வங்கி சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை என அனைத்து முதலீடுகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மேலும், தேவைப்பட்ட இடங்களில் நிதி நிபுணர்களின் கருத்துகளையும் கேட்டு தெளிவுபடுத்தியிருக்கிறார் நூலாசிரியர் சி.சரவணன். நாணயம் விகடன் இதழில் தொடராக வெளிவந்த, `மணி மேனேஜ்மென்ட்' இப்போது உங்கள் கைகளில் புத்தகமாகத் திகழ்கிறது. உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க இந்த நூல் வழிகாட்டும் என்றால் மிகையில்லை.