அப்பாத்துரையாரின் நூல்களை வீடுதோறும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அப்பாத்துரையார் எழுதிய நூல்களில் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ எனும் நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். அந்த நூலின் ஒரே ஒரு பக்கத்தை எழுத அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி எண்ணி வியந்தேன். அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம், தமிழ் இனத்துக்கும் மற்ற இனத்துக்கும் பகை மூட்ட அல்ல- தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்து இருக்கிறார். அவர் அறிந்த அனைத்தையும் எழுதி ஏடாக்கினால் அவை ஒரு மண்டபமே நிறையும் அளவிற்கு இருக்கும்.தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்ற இச்சிற்றேடு மூன்று வகைக் குறிக்கோள்களுடன் எழுதப்பட்டுள்ளது. அது தமிழகத்தை மையமாகக் கொண்டு அதன் அரசியல் விரிவாகிய தென்னாட்டிலும் அதனினும் விரிந்த பண்பு விரிவாகிய தமிழுலகம், அதாவது தென் கிழக்காசியாவிலும் கண்ணோட்டம் செலுத்தி தமிழகத் தேசிய வாழ்வின் உடலும் உயிர் மையமும் காண முயன்றுள்ளது, அந்நாடுகளின் தேசிய, இன உரிமை வரலாறுகளில் வருங்கால வரலாற்றாசிரியர் மிகுதி கவனம் செலுத்தும்படி அது அவர்களைத் தூண்ட முனைந்துள்ளது. இரண்டாவதாக போர்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆகியவை தென்னகத்தைப் பற்றிய அளவில் வெறும் நிகழ்ச்சிகளல்ல. வரலாற்றின் எலும்புருவம் மட்டுமல்ல. அவையே தமிழர் தேசிய வாழ்வின் பல திரும்பு கட்டங்கள், பண்பு மாறுபாட்டுக் கணுக்கள் ஆகும். அத் தேசிய வாழ்வுக்கு உருத் தருபவையும், அதன் வளர்ச்சித் தளர்ச்சிகள், உறுதித் தளர்வுக் கூறுகளை வகுத்தமைக்கும் ஊழ்கூறுகளும் அவையே.
ஆகவே கூடிய மட்டும் போர்க்கள வரலாற்று தேசிய வரலாற்றின் எலும்பு மையமாக, கணு மையங்களாக, திரும்பு கட்டங்களாகவே விளக்கப்பட்டுள்ளன. மூன்றாவதாக, போரும் தேசிய வாழ்வும்கூட நாட்டின் எலும்புக்கூடும் உடலும் மட்டுமே. அவற்றின் உயிர் அதன் தேசியப் பண்பும், அப்பண்பு அகல் உலகுடன் கொண்டுள்ள தொடர்புமேயாகும். நாட்டுக்கு மட்டுமின்றி உலகுக்கே வருங்கால வளர்ச்சிக்குரிய வழியும் திசையும் காட்டுவது இவ்வுயிர்ப் பண்பேயாகும். ஆகவே நிகழ்ச்சி கடந்து அவற்றின் காரண காரியங்களை ஆராய்வதும், அவற்றை நாடு கடந்து உலகில் கண்டு மதிப்பிட முயலுவதும் தேசிய வரலாற்றாசிரியன் இன்றியமையாக் கடமையாகும். தமிழக வரலாற்றின் உயிர் காண்போர் அவ்வரலாறு உண்மையில் உலக வரலாற்றின் ஓர் உட்கூறே என்பதை நெடுநாள் காணாதிருக்க முடியாது. இன்றைய உலகம் ஓருலகம் ஆக முடியாமல், தடுமாறுகிறது என்றால், இன்றைய இந்திய மாநிலமும் கீழ்த் திசையும் ஒற்றுமை காண முடியாமல், தற்பண்பு உணர முடியாமல் தத்தளிகின்றனவென்றால், அது தமிழக வரலாறு காணாத குறையாலும், தமிழக வரலாற்றுயொளியற்ற உலக வரலாறும், கீழ்த் திசை வரலாறும் காண முயல்வதாலுமே எனலாம். மேலும் உலகின் எல்லா நாடுகளின் பழமை வரலாறுகளும் தமிழக வரலாற்றுடன் தொடர்பு கொண்டவை. தமிழக வரலாற்றில் கருத்துச் செலுத்தாத உலக வரலாற்றாசிரியர் அத்தகைய பல உலகப் பழமைகளை உலக வரலாற்றுடன் இணைக்க முடியாமல் விட்டுவிடநேர்ந்துள்ளது. உலக வரலாறும் உலக நாகரிகமும் உயிர் பெறாச் சித்திரங்களாய் இயங்குவதன் காரணம் இதுவே.