கதைகள்தான் மானுடத்தை அழிவிலிருந்து காப்பாற்ற நமக்கிருக்கும் ஒரே உபாயம். ஆதியில் ஒரு கதைசொல்லி இருந்தான். அவன்தான் மொழி, பண்பாடு, மதம், கடவுள், சைத்தான், தேவதைகள், ருசி எல்லாவற்றையும் உண்டாக்கிக் கொடுத்தவன். அவன் கற்பனைதான் இன்று நாம் காணுகிற உலகம். கணப்பருகே உட்கார்ந்து கதை சொல்வதையும், கதை கேட்பதையும் தொடங்கி வைத்த கதைசொல்லிக்கு இன்றைய வாழ்வில் இடமில்லை. தகவல் சொல்லிகளின் தலைமுறையில் நாம் வாழ்கிறோம். கை, கால், விரல் எல்லாம் யந்திர பாகங்களாக ஆகிவிட்டன. முகம் முற்றிலும் பிளாஸ்டிக் ஆகிவிட்டது. ஒரு குழந்தையைக் கொடுங்கள் அதை மிகச்சிறந்த ரோபோட்டாக மாற்றித் தருகிறோம் என்பதைத்தான் இன்றைய கல்வி முறை மறைமுகமாகச் சொல்கிறது. மனிதனின் சகல அம்சங்களும் கொண்ட அதிநவீன ரோபாட்டை சிருஷ்டிக்கும் அறிவியலால் அப்படியான ஒரு ரோபோட்டாக மாறிக் கொண்டிருக்கும் மனிதனை மீட்டெடுக்க எந்த வழியும் சொல்ல முடியவில்லை. தாத்தாக்களும் பாட்டிகளும் குழந்தைகளுக்குச் சொன்ன கதைகளின் வாயிலாக ஒரு தலைமுறையின் வெளிச்சம் கைமாற்றித் தரப்பட்டது. கதைசொல்லிகளின் வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டமே இன்றைய எழுத்துக் கலைஞர்கள். ஆகவேதான் நாம் எழுத்தையும் எழுத்தாளர் ஒரு களையும் கொண்டாடுகிறோம். அப்படியான ஒரு திருக்கூட் டத்தில் சேர்ந்து கொள்வதற்கு இயற்கையாகவே எனக்கு ஏற்பட்ட உந்துதலும் உபாதையும்தான் என்னை எழுத்துக்காரனாக உங்கள் முன் நிறுத்தியிருக்கின்றன. தமிழ் எழுத்துலகில் தனிப்பெரும் ஆளுமையாக வாழ்ந்து மறைந்த ஜெயகாந்தனை ஆதர்சமாகக் கொண்டு பல நூறு எழுத்தாளர்கள் இங்கே தோன்றினார்கள். அவர்களில் நானும் ஒருவன்.