கதைகள் என்றால் ஆசைப்படாதவர்கள் இல்லை. சிறுவர்கள் மட்டுமன்றிப் பெரியவர்களுக்கும் கதை என்றால் ஆசைதான். ஆங்கிலத்திலும் பெரியவர்களும் சிறுவர் கதைகளான ஈசாப் கதைகள், ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் போன்றவற்றைப் படித்து மகிழ்கிறார்கள். தமிழிலும் இவ்வாறே அநேகக் கதைகள் உள்ளன. தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்தியன் கதைகள் என்று எத்தனை எத்தனையோ. சிறுவயதில் இவற்றையெல்லாம் படித்து மகிழ்ந்தது உண்டு. இப்போது நிறைய பேருக்கு ஆங்கிலப் படிப்பின் காரணமாக இம்மாதிரிக் கதைகளின் தொடர்பு விட்டுப்போய் விட்டது.
பஞ்சதந்திரக் கதைகள், அரிய அறிவுரைக் கதைகளாகும். இவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலவற்றைச் சிறிய தொகுப்புகளிலும், யூ ட்யூப் முதலிய காணொளிகளிலும் இப்போது காண்கிறோம். அசலான கதைகளை அப்படியே எடுத்துரைத்தலும் சொல்லுதலும் படித்தலும் கேட்டலும் இல்லாமல் போய்விட்டது. யாருக்கும் நேரமில்லை! அதற்காகவே இந்தப் பகுதி. இது சிறுவர்களுக்கு மட்டுமல்ல, உறுதியாகப் பெரியவர்களுக்கும் பயன்தரும்.
தமிழில் முதன்முதல் பஞ்சதந்திரக் கதைகளை எழுதியவர் வித்துவான் தாண்டவராய முதலியார் ஆவர். இவர் புதுவைக்கு அருகிலுள்ள வில்லியனூரில் பிறந்தவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். இளமையிலேயே தந்தை கந்தசாமி முதலியார் இறந்துவிட்டார். அதனால் பொன்விளைந்த களத்தூரில் தாய்மாமன் குமாரசாமி வீட்டில் வளர்ந்து கல்வி பயின்றார். தமிழன்றியும் வடமொழி, தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் இவருக்குப் பயிற்சி ஏற்பட்டது. அக்கால ராஜதானிக் கல்லூரியில் (இன்றைய பிரெசிடென்சி கல்லூரி) ஆசிரியர் பணி செய்தார்.
பின்னர் செங்கல்பட்டில் சுதேச நீதிபதி வேலையில் அமர்ந்தார். அப்போது பஞ்சதநதிரக் கதைகளை இயற்றினார். திருத்தணிகை மாலை, திருப்போரூர்த் திருப்பதிகம், கதாமஞ்சரி, இலக்கண வினாவிடை முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். திருக்குறள் பரிமேலழகர் உரை, நாலடியார், சீவக சிந்தாமணி, தொல்காப்பியம் முதலிய நூல்களைப் பதிப்பிக்கவும் செய்தார்.