அகில இந்திய காங்கிரஸ் மகாசபை தோன்றி நூறு ஆண்டுகள் நிறைவுறப் போகின்றன. காங்கிரஸ் மகாசபையினால்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது. காங்கிரஸ் மகாசபையைத் துவக்கியவர்களில் முக்கியமானவர்களுள் எனது பாட்டனார் சேலம் விஜயராகவாச்சாரியாரும் ஒருவராவர். சுதந்திரம் இயக்கத்தில் முழுமையாகப் பங்கு கொண்ட அவர் குடும்பத்தில் பிறந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை முன்னிட்டு ஒரு முக்கிய தொண்டாவது செய்யவேண்டும் என்பது என் அவா அதை நிலைப் படுத்தும் வகையில் காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம் தமிழகத்தின் இளைய சமுதாயத்தினரின் மனதில் சரியாகப் படியவேண்டும் என்ற கருத்தைக் கொண்டு காங்கிரசும் சுயராஜ்யமும் என்ற இச் சிறிய நூலை எழுத முன்வந்தேன். எனது பாட்டனாருக்குத் தேசத் தலைவர்கள் எழுதிய கடிதங்கள் இதற்குப் பெரிதும் உதவின.