“ரெண்டு நாளா காது வலியா இருக்கு, எச்சில் கூட முழுங்க முடியலைப்பா… இருமலா
இருக்கு… ஏதாவது மாத்திரை, சிரப் இருந்தா கொடு…” இப்படி சுய மருத்துவம்
செய்துகொள்பவர்களே அதிகம்.
கண்ணில் பார்வைக் குறைபாடு, மூட்டில் வலி என்றால் உடனடியாக மருத்துவரைப்
பார்த்து பரிசோதனை செய்து, மருந்துகளை சாப்பிடுகிறோம். ஆனால்,
பேசுவதற்கும், ஒலியைக் கேட்பதற்கும், காற்றை சுவாசிப்பதற்கும், உண்ட உணவை
விழுங்குவதற்கும் உதவிபுரியும் காது-மூக்கு-தொண்டையில் பிரச்னை ஏற்பட்டால்…
அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிடுகிறோம்.
“ஐம்புலன்களில், முக்கியமான மூன்று புலன்கள் காது – மூக்கு – தொண்டையில்
உள்ளன. பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, உடலின் முக்கியப்பகுதிகளான
காது-மூக்கு-தொண்டைதான். இவற்றை ஒழுங்காகக் கவனித்தாலே… உடலின் முக்கியமான
பிரச்னைகள் பலவற்றைத் தவிர்க்கலாம்” என்கிற காது மூக்கு தொண்டை மருத்துவர்
குமரேசன், அவற்றில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கான சிகிச்சை முறைகளை இங்கே
அடுக்குகிறார். மேலும், மூலிகை மருத்துவர் ஜீவா சேகர் வழங்கியுள்ள இயற்கை
மற்றும் மூலிகை வைத்திய முறைகளும், இயற்கைப் ப்ரியன் ரத்தின சக்திவேல்
தந்துள்ள பராமரிப்புக் குறிப்புகளும் உங்கள் ஆரோக்கியத்துக்கான அச்சாரம்!