இவ்வளவு பெரிய கணித மேதை தானாகவே கணிதத்தைக் கற்றுக்கொண்டார் என்பது நம்ப முடியாத ஆச்சரியம். கல்லூரியில் கணிதத்தைத் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களிலும் தோல்வியைத் தழுவியவர் ராமானுஜன் என்பது கூடுதல் ஆச்சரியம். ‘நம்பர் தியரி’ என்ற கணிதத் துறையில் அவர் செய்த ஆராய்ச்சிகள், இன்றுவரை பல ஆராய்ச்சியாளர்களைத் திக்குமுக்காடச் செய்துவருகின்றன.
மிகக் குறுகிய வாழ்க்கையில் அவர் செய்த சாதனைகள் என்ன? ஏழைமைச் சூழலில் பிறந்த மேதை, வெற்றிப் படிகளை எட்டிப் பிடித்தது எப்படி? உள்ளூர் கல்லூரியில் தேறாத ராமானுஜன், இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றது எப்படி? ராயல் சொசைட்டியின் ஃபெல்லோ (ஊகீகு) ஆனது எப்படி? ஒரு மிகப் பெரிய கணித மேதையின் வாழ்க்கையை அழகாக விவரிக்கிறது இந்நூல்.
"என் கணவராகிய கணிதமேதை ராமானுஜம் பற்றி நம் நாட்டில் தெரிந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஆனால் இதைவிட வெளிநாடுகளில் அறிந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள். எனவே நம்மவர்கள் என் கணவரைப் பற்றி மேலும் விவரமாக அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும் என மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! என் கணவருடைய வாழ்க்கை வரலாற்றை மிகத் துல்லியமாக 'ரகமி' எழுதி இருப்பதைப் படிக்கும்போது எனக்குப் பழைய நினைவுகள், என் மாமனார் குடும்பம், எங்கள் குடும்பத்தின் அத்தனை விஷயங்களும் என் மனத்திரையில் சலனப்படம் போல நினைவுப்படுத்துகின்றது. இந்த நூலை எழுத 'ரகமி' எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்."