என் உடலே என் ஆயுதம் என்று 12 ஆண்டுகளாக இந்திய அரசுக்கு எதிராகப் போராடி வரும் ஐரோம் ஷர்மிளாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே ஷர்மிளாவின் கோரிக்கை. தீவிரவாதக் குழுக்களை ஒடுக்குவதாகக் கூறி, சாதாரண மக்களை நசுக்கவே இந்தச் சட்டம் பயன்படுகிறது என்பது அவரது குற்றச்சாட்டு. ஆனால் சட்டத்தைக் கைவிடக்கூடிய கருணை மனம் 12 ஆண்டுகளாக இந்திய அரசுக்கும் இல்லை. அதிகாரத்துக்குப் பயந்து போகும் கோழைத்தனம் ஷர்மிளாவுக்கும் இல்லை. இதனால் ஷர்மிளா உண்ணாவிரதமிருந்து உயிர் தியாகம் செய்ய முற்படுவதும், தற்கொலைக்கு முயன்ற குற்றவாளியாக ஷர்மிளாவைக் கைது செய்து மருத்துவமனையில் வைத்து டியூப் வழியே உணவைச் செலுத்துவதும் எனத் தொடர்கிறது அவருடைய போராட்டம். இந்தப் போராட்டத்தின் உண்மையான துயரை அப்படியே தர முயன்றிருக்கிறார் நூலாசிரியர். மணிப்பூரின் இரும்புப் பெண்மணியரசு ஷர்மிளா சொல்லப்பட்டாலும் மாநிலம், மொழி, நாடு கடந்து உலகத்தின் பெரும்பாலான மக்கள் அவர் பக்கமே உள்ளனர். இந்த நூலைப் படிக்கும்போது அந்த எண்ணிக்கை மேலும் கூடும் என்பது உறுதி. நன்றி: தினமணி, 09/4/2012.