நிகழ்நிலை அறிவியல் இயற்கை அறிவியல், சமூக அறிவியல், முறைசார் அறிவியல் என மூன்றாகப் பகுக்கப்படுகிறது. இயற்கை அறிவியலில் உறழ்திணை உலகம் அல்லது பருப்பொருள் உலகம் ஆயப்படுகிறது. சமூக அறிவியலில் மக்களும் சமூகங்களும் ஆயப்படுகின்றன. முறைசார் அறிவியலில் புலன்வழி (கருவழியும் உள்ளடங்க) நோக்கீடுகள் அல்லது சான்றுகள் சார்ந்த அளவையியல் (logic), கணிதவியல் முறைகள் ஆயப்படுகின்றன .[5] அறிவியல் அறிவைப் பயன்படுதும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகளும் பயன்முறை அறிவியலின் கீழ் கருதப்படும்.[6] எனவே,அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிப்படையில் அறிவது. இயற்கையை நோக்கி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, பரிசோதனை, முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது கோட்பாடு உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும் பதிலளிக்க வல்லதாகவும் அமையவேண்டும்.