சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்று, விடுதலை வேள்வியின்போது நமது தலைவர்கள் முழங்கினர். நாமிருக்கும் நாடு நமதென்பது அறிந்தோம்; இது நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் - என்று மகாகவி பாரதி எழுதினான். நம்முடைய உரிமைகள் என்ன என்றுகூடத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் வாழும் மக்கள் நம் நாட்டில் அதிகம். உரிமைகளைப் போராடிப் பெறுவது; கடமைகளைக் குறைவின்றிச் செய்வது; இவை இரண்டும் இணைந்த சமுதாயமே வெற்றிபெற்ற சமுதாயமாகும். இந்த உலகில் நம் அனைவரின் அடிப்படைத் தேவையாக விளங்குபவை உணவு, உடை, உறைவிடம் ஆகியன. இவற்றைப் பெறுவதற்கு ஏதோ ஒரு தருணத்தில், நாம் அந்தப் பொருள்களின் பயனை அனுபவிக்கக்கூடிய பயனாளிகளாக, அதாவது நுகர்வோராக மாறுகிறோம். முதலில், நுகர்வோர் என்பவர் யார், முறையீட்டாளர் என்பவர் எப்போது அதற்குரிய தகுதியைப் பெறுகிறார், பொருள் நுகர்வின்போது ஏற்படும் நூதன முறைகேடுகள் என்ன, அவை எப்படி ஏற்படுகின்றன, நுகர்வின்போது நாம் எப்படி விழிப்போடு இருந்து தவறைக் கண்டுபிடிப்பது போன்ற பலவித கேள்விகளுக்கான பதில்கள் நம்மில் நிறையப் பேருக்குத் தெரியாது. இப்படித் தெரியாத பல கேள்விகளுக்கான பதில்களைத் தாங்கி, நம்மை ஒரு விழிப்பு உணர்வுள்ள நுகர்வோராகத் துலங்கச் செய்திட இந்நூல் துணைபுரியும். நாம் வாங்கும் பொருள் தரமானதுதானா, சரியான அளவுடையதுதானா, சிறந்த பொருளைக்கொண்டு தயாரிக்கப்பட்டதுதானா, நாம் தரும் அப்பொருளுக்கு சரியானதுதானா இவைபோன்ற கேள்விகள் நம் மனத்தில் எழலாம். ஒருவேளை பயனாளர் பொருளை வாங்கி ஏமாந்துவிட்டால் எப்படி தங்களைக் காப்பாற்றிக் கொள்வது, எந்த நீதிமன்றத்தை அணுகுவது, நுகர்வோர் நீதிமன்றங்கள் என்னென்ன, நீதிமன்ற வகைகள் என்னென்ன, அவை எங்கு உள்ளன, அவற்றை நுகர்வோர் எப்படி அணுகுவது போன்ற தகவல்களையும் தாங்கியுள்ளது இந்நூல்.