இந்நாவல் 'செயற்கைக் கருத்தரிப்பு ' எனும் விஞ்ஞான விஷயத்தை அடிநாதமாகக் கொண்டது. ஒரு விஞ்ஞான பூர்வ நாவலை ஆர்னிகா பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக எழுதியிருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தேன். நான் சமீபத்தில் படித்த மிகச் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. வினோதாவே வெள்ளி நிலவாகட்டும். அதற்காக நன்றாகப் பிரகாசித்துக் கொண்டிருந்த நட்சத்திரம் மஞ்சுளாவும்
கருவிலேயே அவிந்து போன அவள் குழந்தையும் என்ன பாவம் செய்தார்கள்? சோகங்களே அடிக்கடி சொந்தமாகும் என் நிஜவாழ்க்கையில், நான் படிக்கும் நாவலின் கதா பாத்திரங்களே எனக்கு இனிய நிழல் தரும் விருட்சங்களாகும். கதையில் இளம் ரத்தம் வெளியானது என்பதைப் படித்தவுடனே 16 வருடங்களுக்கு முன்பும் 12 வருடங்களுக்கு முன்பும் கருக்களைச் சுமந்த என் வயிற்றை அழுத்திக்கொண்டேன். சே! என்ன ஒரு கொடுமை? மஞ்சுவின் குழந்தை பூமிக்கு வராமலேயே போய்விட்டது. மஞ்சுவுக்காக என் மனமும் அவள் குழந்தைக்காக என் வயிறும் ஓலமுட்டு ஒப்பாரி வைக்கின்றன.