அரங்கு (Theatre) (கிரேக்கம்:θέατρον(தியேட்ரான்)[1] என்பது காட்சிப்படுத்தல் தளம் அல்லது காணும் இடம் என்பதாகும். இது நிகழ்த்து கலைகளின் ஒரு பகுதி ஆகும். கலைகளை இற்றை செய்து வைப்பதற்கான ஓர் இடமாக அரங்கத்தைக் கொள்ளலாம்.
அரங்கு எனப்படுவது கலைக்குழுவால் நிகழ்த்துக்கலைகளை காட்சிப்படுத்துவதற்கான தளம். இத்தளம் ரசிப்பவர்களின் உள்ளத்திடை பொதுவாக இரு கூறுகளைக் கொண்டுள்ளது. முதலாவது பார்வையாளர்களுக்கு உண்மையிலேயே தங்கள் முன் நிகழும் காட்சியாகவும், இரண்டாவது கலைஞர்கள் எடுத்தாளும் கதை, வரலாறு, நிகழ்வு சார்ந்த கற்பனையான நிகழ்ச்சியைக் காட்டும் கற்பனைத்தளமாகவும் திகழ்கிறது.
அரங்கேற்றக் கலைகளைகளின் காட்சிகள் பார்வையாளர்களுடன் நேர்காணல்கள், சைகைகள், உரைநடை, வசனம், திரைக்கதை, பாடல்கள், இசை மற்றும் நடனம் மூலம் தொடர்புகொள்வதாக அமைந்திருக்கும். பார்வையாளர்களின் அனுபவத்தை இன்னும் சிறப்பாக்க அவ்விடத்தின் கலை, ஒலி, ஒளி அரங்க வடிவமைப்பு போன்றவை மெருகேற்றப்படுகிறது.
கதை கூற விழையும் மனிதனுடைய இயல்பு காரணமாக மிகப் பழங்காலத்திலேயே அரங்கு உருவாகிவிட்டது எனலாம். தொடக்க காலத்தில் இருந்தே அரங்கு சமய சடங்கு, சமூகக்கூடம், அரசவை என பல வடிவங்களை எடுத்து வந்திருக்கிறது. இதற்காக, பேச்சு, நடிப்பு, இசை, நடனம் போன்றவற்றையும், நிகழ்த்து கலைகள், காட்சிக் கலைகள் போன்றவற்றிலிருந்து பல கூறுகளையும் பெற்று ஒரே கலை வடிவமாக ஆக்கியது.