1806 ஜூலை 10. அதிகாலை இரண்டு மணி. வேலூர்க் கோட்டை. ஏறத்தாழ 500
இந்தியப் படை வீரர்கள் அதன் ஐரோப்பியர் குடியிருப்புக்குள் நுழைந்து
ஏராளமான வெள்ளை இன அதிகாரிகளையும் போர்வீரர்களையும் சுட்டுக் கொன்றனர்.
கர்னல் ராபர்ட் கில்லெஸ்பி என்ற தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் படை
வெளியூரிலிருந்து வரும்வரை அவர்களது கிளர்ச்சி எந்த எதிர்ப்புமில்லாமல்
நீடித்தது. பின்னர் நடந்த கடும் மோதலில் எண்ணற்ற இந்தியப் படைவீரர்கள்
கொல்லப்பட்டனர். தப்பியோடிய நூற்றுக்கணக்கானோரை ஆங்கிலப் படையினர்
விரட்டிக் கொன்றனர். கைது செய்யப்பட்டவர்களை இராணுவ நீதிமன்றம்
விசாரித்துத் தண்டித்தது. 1806இல் நடந்த இந்நிகழ்வை வேலூர்ப் படுகொலை,
வேலூர்க் கலகம், வேலூர் எழுச்சி, வேலூர்க் கிளர்ச்சி, வேலூர்ப் புரட்சி
எனப் பலவாறு வரலாற்றறிஞர்கள் வர்ணித்துள்ளனர். வேலூர்க் கிளர்ச்சிக்கான
காரணங்கள், நடந்த நிகழ்வுகள், நிகழ்வுகளுக்குப்பின் கம்பெனி அரசு எடுத்த
நடவடிக்கைகள், அவற்றின் விளைவுகள், முதலானவற்றை இந்நூல் ஆய்வு செய்கிறது.
வேலூர் நிகழ்வுகள் எவ்வாறு தென்னிந்தியாவின் பிற பகுதிகளிலும் எதிரொலித்தது
என்பதையும் விவரிக்கிறது. ‘வேலூர்ப் புரட்சி’ முதல் இந்தியச் சுதந்திரப்
போராகக் கருதப்படும் 1857ஆம் ஆண்டின் பெரும் கிளர்ச்சிக்குக்
கட்டியங்கூறுவதையும் இந்நூல் நிறுவுகிறது. பிரிட்டிஷ் நூலகம் (லண்டன்),
ஸ்காட்லாந்து தேசிய ஆவணக்காப்பகம் (எடின்பரோ), தமிழ்நாடு ஆவணக்காப்பகம்,
இந்திய தேசிய ஆவணக்காப்பகம் முதலானவற்றிலிருந்து திரட்டிய ஆவணங்களிலிருந்து
இந்தியக் கண்ணோட்டத்தில் இந்நூலை எழுதியுள்ளார் கா.அ. மணிக்குமார்.