கட்டமைப்பினாலும் எடுத்துரைப்பு முறையாலும் உலகின் தலைசிறந்த
இலக்கியங்களில் ஒன்றாகத் திகழும் சிலப்பதிகாரத்தின் ஆளுமை வெளிப்படாத
அளவுக்கு, முன்னுரையாக எழுதப்பட்ட பதிகம் கவிந்துகொண்டு தடுக்கிறது. பதிகம்
நீண்ட காலமாகச் சிலப்பதிகாரத்துடன் இணைத்தே அறியப்பட்டுவிட்டது. ஆனால்,
பதிகம் ஒருவகையான முன்னுரைதானே தவிர இலக்கியமன்று; இன்னும் சொல்லப்போனால்
சிலப்பதிகாரத்தின் கருத்துக்கு எதிர்நிலையில் அது இருப்பதையும்
சுட்டவேண்டியுள்ளது. இந்நூல் தமிழ்ப் பதிக மரபினையும் சிலப்பதிகாரப்
பதிகத்தையும் நவீனத் திறனாய்வு நோக்கில் அணுகிப் பதிகத்தின் இயக்கத்தை
வெளிப்படுத்த முயன்றுள்ளது. இன்று சிலப்பதிகாரத்துடன் இணைந்து காணப்படும்
பதிகம், வெண்பா, உரைபெறு கட்டுரை முதலியவற்றைச் சிலப்பதிகாரப்
பனுவலிலிருந்து பிரித்துப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் துணைபுரியும்.