உலகம் யாவையும்
தாமுள வாக்கலும்; நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா; அலகிலா
விளையாட்டுடையார் அவர்; தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே. நாரணன்
விளையாட் டெல்லாம் நாரத முனிவன் கூற; ஆரணக் கவிதை செய்தான் அறிந்த
வான்மீகி என்பான்; சீரணி சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன்; காரணி
கொடையான் கம்பன் தமிழினால் கவி செய்தானே. அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே
ஒன்றைத் தாவி; அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிர்க்காக ஏகி; அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்; அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை
அளித்துக் காப்பான். நாடிய பொருள் கைகூடும், ஞானமும் புகழும் உண்டாம்;
வீடியல் வழியது ஆக்கும் வேரிஅம் கமலை நோக்கும்; நீடிய அரக்கர் சேனை
நீறுபட்டு அழிய வாகை; சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவோர்க்கே. நன்மையும்
செல்வமும் நாளும் நல்குமே; தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே; இம்மையே 'ராம' என்ற இரண்டு
எழுத்தினால். - பால காண்டம்.
வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப்
பொய்யோ எனும் இடையாளடும் இளையானொடும், போனான்-
"மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!" என்பதோர் அழியா அழகு உடையான். ஆசிரியர்
குறிப்பு: திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர். நாள்தோறும்
ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம்,
இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல
துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும்
"திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். வாரியார்
சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து
கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள்
எழுதியுள்ளார்.
அவர்
இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள்
சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை
சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும்
இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக
வந்துள்ளன.
குழந்தைகளுக்கு
"தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன்
சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார். இசைப்பேரறிஞர்
விருது, 1967. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.