இன்றைய இளைய தலைமுறை பல புதுமைகளுக்கு பெருமிதத்தோடு சொந்தம்
கொண்டாடுகிறது. யாரிடமாவது சென்று வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கும்
மனநிலையைத் தூக்கிப் போட்டுவிட்டு, தங்களுக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை
உருவாக்கி பலருக்கு வேலை தரக்கூடிய தொழில் முயற்சிகளை 30 வயதுகூட நிரம்பாத
இளைஞர்கள் பலர் மேற்கொண்டிருக்கிறார்கள். யாரோ பயணித்த, அழகாக உருவாக்கிக்
கொடுத்த பாதையில் இவர்கள் பயணிக்கவில்லை. தங்களுக்கான பாதைகளை தாங்களே
உருவாக்கினார்கள். மாய இருட்டிலிருந்து தங்களுக்கான வெளிச்சத்தைத் தேடிக்
கண்டடைந்த இவர்கள், மற்றவர்களும் பயணிக்க வல்ல பாதையாக அதை மாற்றிக்
கொடுத்திருக்கிறார்கள்.எல்லா தொழில்நுட்பங்களையும் போலவே இணையமும் இருமுனை
கூர்மையான ஒரு கத்தியே! உலகையே ஒரு குடையின்கீழ் கொண்டு வந்திருக்கிறது
இந்த வல்லமைமிக்க வலைப் பின்னல். இதன் ஆபத்துகள் பற்றி இங்கே
விவாதிக்கப்பட்ட அளவுக்கு, இதன்மூலம் சம்பாதிக்கும் கலை
விவாதிக்கப்படவில்லை. எதிலுமே இருக்கிற தவறுகள்தானே வெளியில் தெரிகிறது;
நன்மைகளை நாம்தானே தேடிக் கண்டடைய வேண்டும். அப்படி இணையத்தில் தாங்கள்
எப்படி சம்பாதித்தோம் என்ற தொழில் ரகசியங்களை பகிரங்கமாகப் பகிர்ந்து
கொண்டிருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். சம்பாதிப்பது எப்படி என்ற வழியையும்
காட்டுகிறார்கள்.இந்த நூல் பலரையும் தொழிலதிபர்கள் ஆக்கும் சாத்தியங்களைக்
கொண்டதாக இருக்கிறது..