ஆண்-பெண் இடையே மலரும் உணர்ச்சிகளை தூய நெறியில் நடத்திச் செல்லும் ஆசிரியர் பொருளார்ந்த கம்பீரமான புதினத்தைப் படைத்திருக்கிறார். இந்தப் புதினம் காலத்தை வென்று நிற்கும் அணுச் சேர்க்கைகளால் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் புதினம் 21 ஆம் நூற்றாண்டு தமிழிலக்கியத்திற்கு விடிவெள்ளி !
கலிங்கத்து பரணியையும் கல்வெட்டுகளையும் மற்ற சரித்திர குறிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு அறுநூறு பக்கங்களுக்கு மேல் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டிருக்கும் இந்த தமிழ் நாவலின் சரித்திர சான்றுகள் மக்களை கவரும் வண்ணம் உள்ளது.
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் நடந்த கலிங்கத்துப் போர் மிகக் கொடூரமாக இருந்தது என்பது ஜெயங்கொண்டாரின் கலிங்கத்து பரணியிலிருந்து தெரிகிறது. இவ்வளவு கொடூரம் ஏன்? தமிழரசனான குலோத்துங்கன் அத்தனை கொடூரமானவனா என்பதை ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர். ஏன் கண்ணில் தெரிந்ததையெல்லாம் வெட்டிச் சாய்க்கவேண்டும்? அப்படி என்ன பகை? திரை தராதது மட்டும்தான் என்றால் அற்ப காரணமாகாதா? இந்தக் கேள்விக்கெல்லாம் இந்நாவலின் சுவாரஸியமான கதைப் போக்கில் விடை கிடைக்கும்.