உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் பிறக்கின்றனர் இறக்கின்றனர். ஆனால் அதில்
ஒரு சிலரே சாதனைகள் செய்து சரித்திரத்தின் பொன் ஏடுகளில் தங்கள் பெயரையும்,
பெருமைகளையும் எழுதி வைத்துச் செல்கின்றனர். அப்படிப்பட்டவர்களுள்
ஒருவர்தான் சே குவேரா. சரித்திரத்தின் பக்கங்களில் மட்டும் இல்லாமல்,
மக்களின் மனங்களிலும் கல்வெட்டாக தனது பெயரைச் செதுக்கி வைத்துவிட்டார்.
காட்டில் சென்று தவம் செய்து ஞானம் பெறுவது வழக்கம். அப்படிக்
கடுந்தவம் செய்து பெற்ற ஞானத்தை நாட்டுக்குள் கொண்டுவந்து மக்களுக்குச்
சேவை செய்வதே இயல்பு. ஆனால் சே குவேரா சற்றே வித்தியாசப்படுகிறார். அவர்
நாட்டில் எளிமையான கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்து பெற்ற ஞானத்தை
காடுகளுக்குள் தங்கி அங்கே வசிக்கும் ஏழை எளிய மக்களின் சுதந்திரத்திற்குச்
செலவிடுவதில் ஆனந்தம் கண்டார்.
ஏகாதிபத்தியம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்
என்பதே சே வின் கொள்கை. அவரது வாழ்க்கை மட்டும் அல்ல, அவருடைய மரணமும்கூட
இந்தச் செய்தியைத்தான் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறது.
ஆமாம்!
சே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.