ஒரு செடியை நட்டு வளர்ப்பதற்குக்கூட எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. எந்த அளவுக்கு நீர் ஊற்றவேண்டும்... எப்போது உரம் போடவேண்டும்... எப்போது பூச்சி மருந்து அடிக்கவேண்டும்... எப்போது கிளைகளை வெட்டிவிட வேண்டும்... என எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கையில், வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்தரும் வகையில் ஒரு குழந்தையை வளர்ப்பது என்றால் சாதாரண காரியமா..? வழிமுறைகளைத் தெரிந்துகொண்டால் எதுவுமே சாதாரணம்தான்! உங்கள் குழந்தையைப் புரிந்துகொண்டு, அந்தக் குழந்தையை முறைப்படி எப்படி வளர்ப்பது? குறும்பு செய்யும் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை எவ்வாறு பயிற்சி தருவது?ஒ போன்ற விஷயங்களை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் குருபிரியா. நமது முன்னோர்கள் எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லையே... நாமெல்லாம் வளரவில்லையா..?ஒ என்ற கேள்வி பலர் மனதில் எழும். இதற்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. ஒன்று: நமது முன்னோர்கள் புத்தகங்கள் படிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், கடந்த காலத்தில் பெற்ற அறிவானது, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்ததால், தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் அறிவுரையும் உதவியும் கிடைத்து வந்தன. குடும்பத்தில் இருந்த அம்மா, பாட்டி, மாமியார் எல்லாம் ஒருவகையில் குழந்தை வளர்ப்பு நிபுணர்களாகவும் உளவியலாளராகவும், மருத்துவராகவும், செயல் இயக்குநராகவும், பேராசிரியராகவும் செயல்பட்டுவந்துள்ளனர். இப்போது அந்தக் குடும்ப அமைப்பு மாறியுள்ளது. எனவே, இன்றைய இளம் தம்பதிக்கு இத்தகைய வழிகாட்டுதல்கள் மிகவும் தேவைப்படுகின்றன. அதற்கு இன்றைய நிலையில் ஒரே வழி புத்தகங்கள்தான்! இரண்டாவது: இன்று வாழ்க்கை முறை வெகுவாக மாறியுள்ளது. பல்வேறு அனுபவங்கள்... பல்வேறு வாய்ப்புகள் பெருகியுள்ளன. ஒவ்வொரு தவறையும் குழந்தைகள் செய்து செய்து திருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சிலவற்றைப் பார்த்தோ, படித்தோ திருத்திக் கொண்டுவிடலாம். ஓர் இசைக்கருவி உங்கள் வீட்டில் இருப்பதினாலேயே நீங்கள் இசைக் கலைஞனாக ஆகிவிடுவதில்லை. ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததினாலேயே நீங்கள் நல்ல பெற்றோர் ஆகிவிடுவதில்லை. இசைக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் & வளர்க்கத் தெரியவேண்டும். குழந்தையெனும் யாழ் உங்கள் வீட்டில் இருக்கிறது. மீட்டக் கற்றுத் தருகிறது இந்நூல். உங்கள் குடும்பத்தில் பரவட்டும் இனிய கீதம்!