மேலாண்மை என்பது ஒரு கலை. சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றிக் காட்டும் வல்லமை பெற்றது மேலாண்மை அறிவு. பழங்காலத்தில் சொல்லப்பட்ட கதைகள், அனுபவத்தின் வாயிலாக அந்தக் கலையை நம்முள் வளர்த்துக்கொள்ளத் துணைபுரிந்தன.
சிறந்த உதாரணமாக, பஞ்சதந்திரக் கதைகளைக் கூறலாம். சிக்கல் எழும்போதெல்லாம் எப்படி அந்தச் சிக்கலைத் தீர்த்து வெற்றிக் கனியைப் பறிப்பது என்பது, புத்திசாலி மிருகங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அதனைக் கேட்டு முட்டாள்களாக இருந்த அரச குமாரர்கள் எப்படி அரசாளும் அறிவாளிகளாக மிளிர்ந்தார்கள் என்பதை இள வயதில் நாம் படித்திருப்போம்.
இப்படிப்பட்ட கதைகளை அடிப்படையாகக் கொண்டு மேலாண்மை அறிவு இதுதான் என்று சொல்லப்படாமலே இயற்கையாக வளர்ந்த நிலை இப்போது மாறிவிட்டது. இன்று, வர்த்தக உலகில், ஒவ்வொரு செயலும் வெற்றிகரமாகவும் அதேசமயம் லாபகரமாகவும் நடக்க வேண்டுமென்றால் நிர்வாகத் திறன் மிக முக்கியம். அதற்கான படிப்புகளுக்கும் இப்போது நிறையவே வாய்ப்புகள் உள்ளன. சிறந்த நிர்வாகிகளாகப் பரிணமிக்க இந்தக் கல்வி நிறையவே உதவுகிறது.
படித்தவர்கள் மட்டும்தான் சிறப்புக் கல்வியாக மேலாண்மையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை; சாதாரண சிறு வியாபாரிகளும், சிறுதொழில் முனைவோரும்கூட அனுபவத்தின் அடிப்படையிலும், கூடவே இதுபோன்ற நூல்களின் மூலமும் நிர்வாகக் கலையைக் கற்றுக்கொள்ளலாம்.
தமிழில் நிர்வாகக் கலையை வாசகர்களுக்குக் கொடுக்கும் விதமாக அருணா ஸ்ரீனிவாசன் இந்த நூலை எழுதியிருக்கிறார். இதில் சொல்லப்பட்டிருக்கும் உதாரணக் கதைகள், தோல்வியில் துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு புது உத்வேகம் கொடுத்து நிர்வாகத் திறனுள்ள முழு மனிதராக மாற்றிக் காட்டும்.