கோள்களின் சஞ்சாரம் – கோள்களின் சாரம் - கோசாரம் என மருவியது. கோசார ரீதியில் நவகிரகங்கள் அளிக்கும் பலா பலன்களை ஆராய்வோம். ஒரு குறிப்பிட்ட வருஷம், மாதம், தேதியில் குறிபிட்ட கிரகம் எந்த ராசியில் சஞ்சரிகின்றார் என்பதை பஞ்சாங்கத்தை கொண்டு அறியலாம். அவ்வாறு அந்த கிரகம் சஞ்சரிக்கும் ராசியானது சந்திர லக்கினம் (சந்திரன் நிற்கும் வீடு) முதல் எத்தனையாவது வீடு என்பதை எண்ணிப் பார்த்து அந்த எண்ணிக்கைக்கு தக்கபடி பலன்களை நிர்ணயிப்பது கோசாரப்பலன் நிர்ணயம் ஆகும். கோசாரத்தில் 9 கிரகங்களும் 9 வகையான பலன்களை கொடுக்கும். அவற்றுள் சுப பலன் எவை அசுப பலன் எவை என இனம் பிரித்து கோசாரப் பலன்களை சொல்ல வேண்டும். கோசார ரீதியாக ஒருவருக்கு நல்ல காலமாய் இருந்தாலும் அவரது தசா புத்திகள் அசுபமானதாக இருந்தால் ஜாதகருக்கு சுப பலன்கள் நடைபெறாது. அதுபோல கோசார ரீதியில் ஒருவருக்கு கெட்ட காலமாய் இருந்தாலும், தசா புத்திகள் சுபமானவைகளாக இருந்தால் ஜாதகருக்கு அசுப பலன்கள் நடைபெறாது. கோசாரம்,தசா புத்தி இவற்றில் தசா புத்திகளே பலம் வாய்ந்தது. பொதுவாக ஒரு ராசியில் ஒரு கிரகம் எவ்வளவு காலம் சஞ்சரிப்பார் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.