'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?'
விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதானந்தா துவங்கியதிலிருந்தே வாரந்தோறும் வாசகர்களிடமிருந்து வியப்புடன் எங்களுக்குக் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கும்.
'ஆமாம் சுவாமிஜி... எங்களுக்கும்தான் இது புரியவில்லை! அதெப்படி... இருக்கிற இடத்திலிருந்தே வாசகர்களின் மனங்களைப் படித்துவிட்டு, உங்களால் அத்தியாயங்களை எழுத முடிகிறது?' என்று சுவாமி சுகபோதானந்தாவிடமே நாங்கள் ஒரு முறை கேட்டோம்.
'இது மிகச் சுலபம்! அன்றாடம் நேரிலும் தொலைபேசியிலும் தபால் மூலமும் இ_மெயில் மூலமும் எத்தனையோ பேர் என்னிடம் தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தில், பணியிடத்தில், நண்பர்களிடத்தில் எதிர்கொள்ளும் சங்கடங்களை என்னிடத்தில் சொல்லி, தீர்வு கேட்கிறார்கள். நானும் சொல்கிறேன்! என்னிடத்திலே பத்துப் பேர் வைக்கின்ற சொந்த வாழ்க்கைச் சிக்கல்கள்தான், பல்லாயிரக்கணக்கானவர்களின் பிரச்னையாக இருக்கிறது. அதைத்தான் நான் தொடர்ந்து எழுதுகிறேன்' என்றார் சுவாமிஜி.
நிஜம்தான்! சுவாமி சுகபோதானந்தாவின் கட்டுரைகளில் வரிக்கு வரி எதிரொலிப்பவை, நிஜ வாழ்க்கைப் பிரச்னைகள். அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்கு, அவர் சொல்லும் தீர்வுகளும் நடைமுறையில் மிக மிகச் சாத்தியமானவை.
அதனால்தான், முதன்முதலில் விகடனில் அவரது கட்டுரைத் தொடர் வெளியானபோதும் சரி... அதுவே புத்தகமாகத் தொகுக்கப்பட்டு, கடைகளுக்கு வந்தபோதும் சரி... ஆரவாரமான வரவேற்பைப் பெற்றது.
முதல் பதிப்பு விற்பனைக்கு வந்த வேகத்திலேயே வாசகர்கள் போட்டி போட்டு, அள்ளிக்கொண்டு போய்விட... அடுத்தடுத்த பதிப்புகளுக்கு அவசியம் ஏற்பட்டது. தமிழ் பதிப்பக வரலாற்றில் ஒரு சாதனையாக, இரண்டரை லட்சம் பிரதிகளைத் தாண்டி, அந்தப் புத்தகம் விற்றது. இப்போதும் விற்றுக் கொண்டிருக்கிறது.
அதன்பிறகு, சுவாமிஜியின் எழுத்துகள் இரண்டாவது பாகமாக விகடனில் வெளியாகத் துவங்கியபோதும் சற்றும் குறையாத வரவேற்பு. இந்த முறை, அவரது பல்வேறு சுற்றுப்பயணங்களில் எடுத்த உற்சாகம் ததும்பும் புகைப்படங்களையும் சேர்த்து, புதிய பரிமாணம் மற்றும் புதிய வீச்சுடன் அமைக்கப்பட்டிருந்த கட்டுரைகளை ஜம்மென்று களைகட்டின.
அதன் தொகுப்பு இதோ, புத்தக வடிவில் உங்கள் கைகளில்!