தமிழ்த் திரையுலகில் அழியாத முத்திரை பதித்தவர் ஆச்சி மனோரமா. தந்தையால்
புறக்கணிக்கப்பட்ட தாயுடன் குழந்தைப் பருவத்திலேயே ஊர்விட்டு ஊர் வந்து
கஷ்டங்கள் பல அனுபவித்தார். பாட்டுத் திறன்மிக்கவராகத் திகழ்ந்த இவர்,
பின்னர் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்று தனது நடிப்பாற்றலை
வெளிப்படுத்தினார். திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து தமிழ்
கூறும் நல்லுலகை சிரிக்க வைத்தார். அனைவர் நெஞ்சங்களிலும் நீங்கா இடம்
பிடித்தார். இவரது அன்னையைப் போலவே இவருக்கும் திருமண வாழ்க்கை
நிலைக்கவில்லை. ஒரேயொரு ஆண்மகனைப் பெற்று அவனே தனது உலகம் என்று வாழ்க்கையை
வாழ்ந்தார். அன்பாலும், அரவணைப்பாலும், பாசத்தாலும் தமிழ் மக்களின்
மனங்களைக் கொள்ளை கொண்டார். பட்டங்களும், விருதுகளும் இவரைத் தேடி வந்தன.
ஆச்சி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட மனோரமா, தனது 78வது வயதில்
மரணமடைந்தார். சுருக்கமாக இவரது வாழ்க்கை இதுதான் என்றாலும் இதற்குள்
புதைந்து கிடக்கும் இன்பங்களும், துன்பங்களும் ஏராளம். அதனை விளக்குகிறது
இந்நூல்.