புதுமைப்பித்தன் எழுத்துக்களில் எப்போதும் எளியவர்களுக்கு என்று ஓர் இடம் உண்டு. வாழ்கையின் அடிமட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைப்போக்கு இவருடைய பல கதைகளின் கருவாக அமைந்திப்பதைக் காணமுடிகிறது. சமூக ஏற்றத்தாழ்வு இவருடைய மனத்தை உறுத்தும் முள் எனலாம். இதனை இவர் எடுத்துக்கூறும் பாங்கு நேர்த்தியானது.
தேசியக்கவிஞரான பாரதியார், சந்திரிகையின் கதை, ஞானரதம் போன்ற நாவல்களை எழுதியதற்கும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இரணியன் பிசிராந்தையார் போன்ற நாடகங்களை எழுதியதற்கும் எதுகாரணமாக இருந்ததோ, அதுவேதான் புதுமைப்பித்தன் நாடகம் எழுதுவதற்கும் காரணமாக இருக்கிறது.
ஒரு படைப்பாளி, தான் சொல்ல விரும்புகிற கருத்தினை எந்த இலக்கிய வடிவத்தில் சொன்னால் ,மக்கள் மனத்தைத் தடங்கலின்றிச் சென்றடையும் என்று நம்புகிறானோ, அந்த இலக்கிய வடிவத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். இப்படிச் செய்வதற்கு அவனுக்கிப் பூரண உரிமை இருக்கிறது. எனவே, விளக்கமாகவும் விரிவாகவும் தாம் சொல்ல விரும்பிய கருத்திற்கு நாடகவடிவம் ஈடுகொடுக்கும் என்று நம்பிய புதுமைப்பித்தன் சில நாடகங்களைப் படைத்தளித்திருக்கிறார். அவருடைய இந்த நாடகங்களில் பலனளித்திருப்பதையும் காண முடிகிறது.