இந்நாவல் பற்றி எழுத்தாளர் ஜி.பி. சதுர்புஜன் -
"இந்த மர்மநாவல் ஒரு ஹிட்ச்காக் திரைப்படம் போல எடுத்த எடுப்பிலேயே சூடுபிடிக்கிறது. இந்தக்கால படித்த இளைஞர்களுக்குப் பரிச்சயமான மென்பொருள்துறை கார்ப்பொரேட் சூழலில் பரபரவென்று தொடங்கி, இந்த நாவல் நம்மை மகாபலிபுரம், தஞ்சை, கோவை என்று பல்வேறு ஊர்களுக்கு இழுத்துச் செல்கிறது. அகில், கீர்த்தி, சுதர்சன், பானு, சினேகா என்று சேரும் நண்பர்குழாம் நம்மையும் கூடவே சேர்த்துக் கொண்டு ஒரு தேடலில் கொண்டு செல்கிறது. இடையிடையே நமக்குத் தெரியாத பல ருசிகரமான, ஆச்சரியமான வரலாற்று விபரங்கள் கதை நடுவே ஊடுபாவாக நெய்யப்படுகிறது. இந்த புத்திசாலித்தனமான, புதுமையான கதைப்பின்னணியில் நாம் கரைந்து விடுகிறோம். ‘அடுத்து என்ன நடக்கப் போகிறது?’ என்று ஒவ்வொரு நிமிடமும் நம்மை கொக்கி போட்டு இழுத்துச் செல்கிறது இந்த பிராஜக்ட் ஃ நாவல். ஒரு சிறந்த மர்ம நாவலுக்கான வேகமும் விறுவிறுப்பும், இந்த நாவலின் நாடித்துடிப்பாக தொடர்ந்து இயங்குகிறது. ’பிராஜக்ட் ஃ’ இளைஞர்களும் மனதில் இளமை உள்ளவர்களும் படித்து மகிழவேண்டிய மர்மநாவல். "