மனித வாழ்வில் நட்சத்திரங்களும், கிரகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் ரேவதி முதல் அஸ்வினி வரையிலான 27 நட்சத்திரங்கள் மனிதனின் அங்கங்களாக விளங்குகின்றன.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித் தன்மை, பார்வை, நிறம், குணம், ஆடை, அணிகலன், பூக்கள், தொழில், நைவேத்தியம், தூபம், மந்திரம், பலன் என்று தனித்தனியாக பல்வேறு அம்சங்கள் இந்து சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி உரிய நட்சத்திர கோவில்களுக்குச் சென்று பரிகாரம் செய்வதால் குறைபாடுகளைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த நூலில் 27 நட்சத்திர தலங்களையும், பரிகார முறைகளையும் செந்தூர் திருமாலன் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கியுள்ளார். ஒவ்வொரு நட்சத்திர பலன் குறித்த பாடல்களை தஞ்சை சரஸ்வதி மகாலில் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் மிகப் பழமையான ஓலைச்சுவடிகளில் இருந்து சேகரித்து தந்துள்ளார்.
மேலும் தல வரலாறு, கோவிலின் வரலாற்றுக் குறிப்பு - சிறப்பு, வழிபடும் முறை, பூஜை நேரம், கோவில் தொலைபேசி எண்கள், நோய் விலகப் பரிகாரம், நடை திறந்திருக்கும் நேரம், போக்குவரத்து வசதி, தங்கும் வசதி போன்ற அறிந்து கொள்ள வேண்டிய அனைத்துத் தகவல்களும் அடங்கிய அரிய பொக்கிஷமாக இந்நூல் திகழ்கிறது. பக்கத்துக்குப் பக்கம் கண்ணைக் கவரும் வண்ணப்படங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
"நட்சத்திரங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும், பரிகார ஸ்தலங்கள் பற்றிய விவரங்கள், நட்சத்திரப் பலன்கள் போன்றவற்றை இதுவரையில் வெளிவராத பல தகவல்களுடன் படிப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டும் கையேடு போல் வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது" என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அணிந்துரையில் அளித்துள்ள புகழுரை, இந்த நூலுக்கு கிடைத்த நற்சான்றிதழாகும். இந்துக்கள் இல்லங்களில் அவசியம் இருக்க வேண்டிய நூல்.
Religious and Astrology