அனைவருக்கும் ஏற்படக்கூடிய வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் ஐம்புலன்களால் பதிவு செய்யப்பட்டு ஆறாம் அறிவால் பகுத்து அறியப்பட்டு, மனதால் இயக்கப்படுகிறது. அதன் பின்னணியில் அன்றாட வாழ்வு நகர்கிறது.
ஒரு சில சமயங்களில் நாம் மனதில் நினைத்துக்கொண்டிருந்த நபர் நேரில் வருவது அல்லது போனில் அழைப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. மேலும், சாப்பிடும்போது புரை ஏறிவிட்டால், யாரோ நினைக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. விடியற்காலை கனவு மூலம் பலரும் எதிர்காலம் பற்றி உணர்வதும் அன்றாட நிகழ்வாக உள்ளது. அனைவரது மனதிற்குள்ளும் பொதுவாக இருக்கும் இது போன்ற முன்னறியும் திறனுக்கு ஏழாம் அறிவு காரணமா? என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது.
ஏழாவது அறிவு என்று பொதுவாக சொல்லப்படும் அதீத உள்ளுணர்வு சக்தியானது இ.எஸ்.பி. (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்செப்ஷன்) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் உலகம் முழுவதுமே அத்தகைய சக்தி பெற்ற மனிதர்களின் அசாதாரணமான அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இ.எஸ்.பி. என்பது எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் விஷயங்களை அல்லது கடந்த காலத்தில் நடந்து முடிந்த விஷயங்களை ஒருவரது மனதால் உணர முடிகின்ற அல்லது அதை காட்சிப்படுத்துகின்ற ஆற்றல் என்று குறிப்பிடப்படுகிறது.