பாரசீக கவிதை வடிவத்திலிருந்து உருவான கஸல் வடஇந்திய உருது கவிதையின் வடிவத்தில் தீவிர செல்வாக்கை செலுத்தியது. மிர்சாகாலிப், மிர்தாகுமிர் செளதா கவிஞர்களிடம் இதன் பிரதிபலிப்பை காணலாம். இது மக்கள் மத்தியிலான பிரபல இசைவடிவமாக உருவாகினாலும் ஈரான், மத்திய ஆசியா, துருக்கி, இந்தியா பாகிஸ்தான் நிலப்பகுதிகளில் நாட்டுப்புற இசை வடிவம், வெகுஜன இசை வடிவம், செவ்வியல் இசை வடிவம் என பன்மைத்தன்மைமிக்க அடையாளங்களை கொண்டிருந்தன. உஸ்தாத் அமனாத் அலிகான், மெகதிஹஸன், பரீதா கானம், (Farida Khanum) இக்பால் பானோ (Iqbal Nano) மற்றும் குலாம்அலி உள்ளிட்டோர் கஸல் இசை வடிவத்தின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களாக திகழ்கின்றனர்.
சூபி இசை மரபின் தொடர்ச்சியாக இந்திய இசை மரபால் மேதையாக விளங்கிய ஹஸரத் இனயத்கானை (1882-1927) குறிப்பிடலாம். கிழக்குலகையும், மேற்குலகையும் இசை மரபால் ஒன்றுபடுத்தி ஐரோப்பிய நாடுகளிலும் இவரது இசைப்பயணம் நிகழ்ந்துள்ளது. அரபு, பார்சி, சமஸ்கிருத மொழிப் புலமையும், இந்திய வகைப்பட்ட இசையில் தேர்ச்சியும் சூபிச தத்துவ நிலைப்பாட்டில் ஆழ்ந்த ஈடுபாடும் ஒருங்கே பெற்றவர். அஜ்மீரின் குவாஜா முகீனுதீன் தோற்றுவித்த சிஸ்திதரீகாவின் மற்றுமொரு சூபியான நிசாமுத்தீன் அவுலியாவின் வழித்தோன்றலாக ஹஸரத் இனயத்கான் அடையாளம் பெறுகிறார்.